ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கியது இந்தியாவைச் சேர்ந்த விமானமா?

Update: 2024-01-23 01:31 GMT

ஆப்கானிஸ்தானில் சீனா, தஜகிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் உள்ள படக்‌ஷான் மாகாணத்தில் பயணிகள் விமானம் ஒன்று திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்திற்கு உள்ளானது. இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்த செய்தியில் அந்த விமானம் இந்தியாவிற்கு சொந்தமானது என தகவல் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அந்த விமானம் இந்தியாவில் இருந்து கிளம்பிய விமானம் அல்ல எனவும், இந்தியாவை சேர்ந்த தனியார் விமானம் அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மொரோக்கோ நாட்டில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. 

இதனிடையே ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் மீது பறக்கும் போது மாயமாகி இருப்பதாகவும், விழுந்து நொறுங்கிய விமானம் அந்த விமானமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அந்த விமானம் இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு பறந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் விமானம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் பிற நாட்டு விமான ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து இணைப்பில் இருந்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Similar News