உள்நாட்டிலேயே உருவாக இருக்கும் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்.!

Update: 2021-06-05 13:05 GMT

மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தற்போது அதிநவீன நீர்மூழ்கி கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் தயாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் தற்பொழுது அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு வரை இந்தியா ரஷ்யாவின் அகுலா என்ற பெயர் கொண்ட இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொண்டு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டுகள் குத்தகைக்கு இந்தியா கடந்த 2012ம் ஆண்டு எடுத்திருந்தது. 


சுமார் 8 ஆயிரத்து 140 டன் எடை கொண்ட அந்தக் கப்பல் INS சக்ரா 2 என்ற பெயருடன் இந்திய கப்பல் படையில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தது. இந்திய எல்லைப் பாதுகாப்பிலும், எதிரி நாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்த கப்பலின் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும். தற்போது, இந்தக் கப்பலின் குத்தகை காலம் முடிவுக்கு வந்த நிலையில், பராமரிப்பு பிரச்சனைகள் காரணமாக, மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் முழு தீவிரம் காட்டி வருகிறது. அதனடிப்படையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டு தளவாட தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்திய நிறுனங்கள் உள்நாட்டில் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News