மருத்துவ பணியாளர்களை தாக்கினால் கடுமையான தண்டனை : மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

Update: 2021-06-21 12:37 GMT

தற்போது உள்ள கொரோனா காலகட்டங்களில் இந்நோய் தொற்றுக்கு எதிராக முன்கள பணியாளர்களாக போராடிக் கொண்டிருப்பவர்கள் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் தான். அவர்களுடைய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மருத்துவர் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்குவோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா சிகிச்சை தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பிய கடிதத்தில் இதுபற்றி அவர் கூறுகையில், மருத்துவர் உட்பட சுகாதார பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல், தாக்குதல் போன்றவை, அவர்களது மன உறுதியைக் குறைத்து, பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கக்கூடும். எனவே தாக்குதலில் ஈடுபடுவோர் மீது 2020ம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த சட்டத்தில், டாக்டர் உட்பட சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு, ஐந்து அல்லது ஏழு ஆண்டு சிறை மற்றும் 2 அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. மேலும் மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை தங்களின் சார்பாக போராடுபவர்கள் ஆக எண்ண வேண்டும் எனவும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதில் மக்களுக்கு மிகுந்த பங்கு உண்டு என்றும் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அவர்கள் கூறியுள்ளார். 

Similar News