நக்சலைட் பகுதிகளில் 18,734 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல்!
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் சௌபாக்யா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் கொண்டு வந்தது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கரின் சில பகுதிகளில் 18,734 வீடுகள் தவிர, மற்ற வீடுகளுக்கு 2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக மாநிலங்கள் தெரிவித்தன.
அசாம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 31ம் தேதி நிலவரப்படி 100 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. செளபாக்யா திட்டம் தொடங்கப்பட்டது முதல் 2.817 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மின்சார துறையில் பணப்புழக்க பிரச்னையை தீர்க்க ஆர்இசி மற்றும் பிஎப்சி நிறுவனங்கள் மாநிலங்களுக்கு ரூ.1,35,537 கோடியை ஒதுக்கீடு செய்தன. இவற்றில் ரூ.79,678 கோடி விநியோகிக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி சாதனங்களின் இறக்குமதியை குறைப்பதற்காக, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மின்சாதன உற்பத்தி மண்டலங்கள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி மூன்று ஆண்டுகளுக்குள், மூன்று உற்பத்தி மண்டலங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மண்டலங்கள் அமைக்க நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது பரிசோதனை வசதிகள் அமைக்கப்படும். இந்த உற்பத்தி மண்டலங்களுக்கான தேர்வு அளவுகோல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
கொவிட்-19 காரணமாக மின் நுகர்வு குறைந்ததால், மின்துறையில் ஏற்பட்ட பணப்புழக்க பிரச்னையைக் குறைக்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பணப்புழக்க திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.