ரயில் பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் RPF படை மேற்கொண்ட நடவடிக்கை? களையெடுக்கப்படும் வித்-அவுட் டிக்கெட்டுகள்!

Update: 2023-01-07 04:37 GMT

ரயில்வே சொத்துக்கள், பயணிகளின் பாதுகாப்பு, அவர்கள் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிக்கும் பொறுப்பு ரயில்வே பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு சிரமமில்லாத பயணத்தை உறுதி செய்யவும், அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாதவாறு தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு மாத கால இயக்கத்தை ரயில்வே பாதுகாப்பு படை ஆர்பிஎப் அறிமுகப்படுத்தியது.

இந்த நடவடிக்கையின் போது, பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 5100-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். 6300-க்கும் மேற்பட்ட நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரயில்களில் குறிப்பாக, சில மூன்றாம் பாலினத்தவரால் பயணிகளுக்கு தொந்தரவு அளித்தல், பயணிகளிடம் அவர்கள் தவறாக நடந்துகொள்வது குறித்து பல புகார்கள் அடிக்கடி தெரிவிக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தின் போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 1200-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில்வே சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து ரூ.1.28 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

நீண்ட தூர ரயில்களின் பொதுப் பெட்டிகளில் இருக்கைகளை ஆக்கிரமிப்பவர்களைக் கண்டறியும் வகையில் இயக்கங்கள் நடத்தப்பட்டன. துண்டு விரித்தல், இருக்கைகளை வளைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட 36 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Input From: Gov.in

Similar News