தமிழ் மொழி வளர்சிக்கு அகாடமி.. டெல்லி அரசுக்கு குவியும் பாராட்டுக்கள்.!
தமிழ் மொழி வளர்சிக்கு அகாடமி.. டெல்லி அரசுக்கு குவியும் பாராட்டுக்கள்.!
தமிழ் மக்களின் கலாசாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணர்கின்ற வகையில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற தமிழர்கள் அங்கு வாழுகின்ற மற்ற மொழியினருக்கு உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களின் வாழ்க்கை முறையை மற்றவர்களும் கடைப்பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெல்லியில், தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கியும், அதற்கு துணைத் தலைவராக தமிழ் சங்க உறுப்பினரை நியமித்தும் டெல்லி அரசு உத்தரவிட்டிருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லி துணை முதலமைச்சர், கலை, கலாசார மொழித்துறையின் அமைச்சருமான மணிஷ் சிஷோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அகாடமிக்கான அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் அமைக்கப்படும். தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழ் மக்களின் கலாசாரம் மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் டெல்லி அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.