இந்திய பொருளாதாரம் 332 லட்சம் கோடியை தாண்டியதாக தகவல்: மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம் உறுதி!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 332 லட்சம் கோடியை தாண்டியதாக கூறப்படுகிறது. இதை மத்திய அரசு உறுதிப்படுத்தாத நிலையில் அதானி, மத்திய மந்திரிகள் பா.ஜ.க நிர்வாகிகள் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

Update: 2023-11-20 11:42 GMT

பொருளாதாரத்தில் உலக அளவில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி உறுதி கொண்டுள்ளார். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வெற்றி கண்டது. இது கடந்த நான்கு காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சியாகும்.


மேலும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம். இந்நிலையில் நேற்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு டிரில்லியன் டாலரை தாண்டியதாக தகவல்கள் வெளியானது. பன்னாட்டு நிறுவனத்தின் தரவுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட அனைத்து நாடுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரங்களை யாரோ 'ஸ்க்ரீன்ஷாட்' எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.அது வைரலானது.


ஆனால் மத்திய நிதி அமைச்சகமோ அல்லது தேசியப் புள்ளியல் அலுவலகமோ அதை உறுதி செய்யவில்லை. உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகையில் அது தவறான செய்தி என்றும் இன்னும் அந்த எண் இந்தியா எட்டவில்லை என்றுமம் தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமற்ற தகவலை ஏராளமான பிரபலங்கள் வரவேற்றுள்ளனர். பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


வாழ்த்துக்கள் இந்தியா. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானையும் ஜெர்மனியையும் வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு இந்தியா முன்னேற இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன. மூவர்ண கொடியின் எழுச்சி தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய ஜல் சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத் கூறியிருப்பதாவது:-


நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு ட்ரில்லியன் டாலரைத் தாண்டி உலக அளவில் பெருமை சேர்த்துள்ளது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் புதிய இந்தியாவின் எழுச்சி உண்மையிலேயே ஒப்பற்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மத்திய கலாச்சாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் முதலாக நான்கு ட்ரில்லியன் டாலரை கடந்துள்ளதற்கு வாழ்த்துக்கள். ஐந்து ட்ரில்லியன் டாலரை நோக்கிய பயணம் தொடர்கிறது.இது மோடியின் உத்தரவாதம் என்று கூறியுள்ளார். மராட்டிய மாநில துணை முதல் மந்திரி தேவேந்திரபட்டினம் மாநில பா.ஜனதா தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Similar News