பிப்ரவரியில் தேதி அறிவிப்பு.. ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல்.? காரணம் இதுதானாம்.!

பிப்ரவரியில் தேதி அறிவிப்பு.. ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல்.? காரணம் இதுதானாம்.!

Update: 2021-01-14 13:56 GMT

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கா பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக, தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கவும், அதற்கான இடங்களை தேர்வு செய்யவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, தேர்வுகளில் இடையூறு இல்லாதவாறு ஏப்ரல் மாதத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், பிப்ரவரி மாத மத்தியில் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். தற்போது அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் நாட்கள் குறைவாக உள்ளதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Similar News