கொரோனாவில் கட்டுப்பாட்டில் கோட்டை - தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்களின் 115 மாவட்டங்களை கண்காணிக்கும் மத்திய அரசு!
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், மிசோராம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் கொரோனா பரவல் நிலைமை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநிலங்களில் தினசரி புதிய கொவிட் நோயாளிகள் அல்லது நோய் தொற்று அதிகரிப்பு காணப்பட்டது. கொரோனா கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், நிர்வாகம் ஆகியவற்றுக்கான பொது சுகாதார நடைமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த 1 மாதத்தில் இந்த மாநிலங்களில் கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து டாக்டர் வினோத் பால் கவலை தெரிவித்தார். அதிகபட்ச தொற்று உள்ள பகுதிகளில் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட கண்காணிப்பு உத்திகளின்படி கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். கொவிட் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று இந்த மாநிலங்களை அவர் வலியுறுத்தினார்.
கீழ்காணும் முக்கியமான கொவிட் கட்டுப்பாடு மற்றும் நிர்வாக உத்திகளை மத்திய சுகாதார செயலாளர் வலியுறுத்தினார்:
அதிகபட்சமாக தொற்று விகிதம் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆர்டிபிசிஆர் சோதனைகளை போதிய அளவு மேற்கொள்வது அவசியமாகும். இதில் ஏற்படும் தொய்வு இந்த மாவட்டங்களில் நிலைமையை மோசமாக்கக் கூடும்.
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்போரை தீவிரமாகவும், கண்டிப்புடனும் கண்காணிப்பது அவசியம். இதன் மூலமே அவர்கள் மற்றவர்களுடன் கலக்காமலும் அண்டை அயலார், கிராமம் உள்ளிட்ட மக்கள் பகுதிகளில் தொற்றினை பரவச் செய்யாமலும் தடுக்க முடியும்.