ஐ.டி ஹார்டுவேர் ஏற்றுமதி மையமாக உருவெடுக்கும் இந்தியா! 1,80,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அசத்தல் திட்டம்!

ஐ.டி ஹார்டுவேர் ஏற்றுமதி மையமாக உருவெடுக்கும் இந்தியா! 1,80,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அசத்தல் திட்டம்!

Update: 2021-02-27 06:45 GMT

ஐடி ஹார்டுவேரில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐடி ஹார்டுவேரில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் மிகப் பெரிய முதலீடுகள் ஈர்ப்பதை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்பை  இத்திட்டம் தெரிவிக்கிறது.

லேப்டாப்புகள் , டேப்லெட்டுகள், அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் இத்திட்டத்தின்  இலக்கு பிரிவின் கீழ்  இடம் பெற்றுள்ளன.

இத்திட்டம், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இலக்கு பிரிவின் கீழ் வரும் பொருட்களின் நிகர விற்பனையில் 4 சதவீதம் முதல் 2 சதவீதம்  மற்றும் 1 சதவீதம் ஊக்குவிப்பு தொகையை தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு 4 ஆண்டு காலத்துக்கு வழங்கும்.

இத்திட்டம், லேப்டாப்புகள், டேப்லெட்டுகள், அனைத்து வசதிகளுடன் கூடிய கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் தயாரிக்கும் 5 உலகளாவிய முக்கிய நிறுவனங்கள் மற்றும் 10 உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும்.

தற்போது இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் இது முக்கியமான பிரிவாகும்.

இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் மொத்த செலவு 4 ஆண்டு காலத்துக்கு தோராயமாக ரூ.7,350  கோடி ஆகும். இதில் ஊக்குவிப்பு ஒதுக்கீடு ரூ.7,325 கோடி மற்றும் நிர்வாக கட்டணங்கள் ரூ.25 கோடி ஆகும் என கணிக்கப்படுகிறது.

இத்திட்டம், நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் சூழல் மேம்பாட்டை அதிகரிக்கும். எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில், இந்தியா உலகளாவிய மையமாக மாறும். இதன் மூலம் ஐடி ஹார்டுவேர் ஏற்றுமதி மையமாக இந்தியா உருமாறும். இத்திட்டம் அடுத்த 4 ஆண்டு காலத்துக்கு, 1,80,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றல் படைத்தது.

இத்திட்டம் ஐ.டி ஹார்டுவேரின் உள்நாட்டு மதிப்பு கூட்டுதலுக்கு உந்துதல் அளிக்கும். 2025 ஆம் ஆண்டுக்குள் இது 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News