2023-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 1 லட்சம் ட்ரோன் பைலைட்டுகளை தயார்படுத்த வேண்டும் - அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்!

Update: 2022-12-07 03:55 GMT

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் வகையில் 2023-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 1 லட்சம் ட்ரோன் பைலைட்டுகளை தயார்ப்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.

பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசிகளை நாடு முழுவதும் கொண்டு சென்று விநியோகித்ததில் ட்ரோன்கள் பெரும் பங்குவகித்ததாகத் தெரிவித்தார். ட்ரோன் தொழில்நுட்பம் சிறந்த நிர்வாகத்திற்கும் அதன் மூலம் எளிதாக வாழ்வதற்கும் வகைசெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவசாயத்துறைக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு, சுற்றுலா, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் இது இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ட்ரோன் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில் 2021-ம் ஆண்டு மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக கொள்கை வகுத்ததையும், உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை செயல்படுத்தியதையும், 12 அமைச்சகங்கள் இந்த இலக்கை எட்டுவதற்கு அமர்த்தப்பட்டிருப்பதையும், நவீன ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் 3 அம்ச அணுகுமுறை கொண்டு வரப்பட்டிருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ட்ரோன் பைலைட்டுகள் வேலைவாய்ப்பின் மூலம் நல்ல ஊதியம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதால், இவர்களது பணிமூலம் விவசாயத்துறையில் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடி அளவுக்கு 4 மடங்கு சேமிக்க முடியும் என்றும் அவர் கூறினார். சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்கும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படும் என்றும் அவர் கூறினார்.

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று கூறிய அமைச்சர், இதன் மூலம் திறன் வாய்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்வதையும் தடுக்க முடியும் என்று கூறினார். இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுடன், நாட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல முயற்சிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்-கள் ட்ரோன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது என்று கூறிய அவர், இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்து லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்காக உருவாக்கும் என்று தெரிவித்தார்.

Input From: Hindu

Similar News