9 ஆயிரம் கோடியிலிருந்து 82 ஆயிரம் கோடி - ராணுவ கட்டமைப்பில் அசத்தும் இந்தியா!

Update: 2022-12-03 06:39 GMT

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்கள் மூலம், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்க ஏதுவாக இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் தயாராகி வருகிறது.

பாதுகாப்புக் கப்பல் கட்டும் தளங்கள் குறித்து, மும்பையில்நடைபெற்ற பாதுகாப்புத்துறையின் ஆலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார். தேசியப் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதை உறுதிசெய்யும் வகையில், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையைப் பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

தற்சாற்பு இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் விதமாக, உரிய நேரத்தில் ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ராணுவ இறக்குமதியைக் குறைக்கும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.

ராணுவ கப்பல் கட்டும் தளங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் தளங்களாக மாறியிருப்பதாகக் கூறிய திரு ராஜ்நாத் சிங், கடந்த 2021-2022ம் ஆண்டு ரூ.8,925 கோடியாக இருந்த கப்பல் கட்டும் தளங்களின் உற்பத்தி மதிப்பு, நடப்பு ஆண்டில் ரூ.81,777 கோடியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசு இ- சந்தை மூலம் கப்பல் கட்டும் தளங்களில் நடைபெறும் கொள்முதல்கள், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், கொள்முதலில் வெளிப்படைத்தன்மைக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் கூறினார்.

இந்திய கப்பல்கட்டும் தளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தரமான உற்பத்திப் பணிகளை நட்பு நாடுகள் வெகுவாகப் பாராட்டி வருவதாகவும்  ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Input From: MINT

Similar News