கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் முதலமைச்சர் எடியூரப்பா.!
ஏற்கனவே கடந்த மார்ச் 12ம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் முதலமைச்சர் எடியூரப்பா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த அலையில், சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடந்த 18ம் தேதி 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிரமாக மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் கண்காணித்து வந்தனர். மேலும், அவருக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை தேறியது. இதனையடுத்து அவர் இன்று (ஏப்ரல் 22) குணமடைந்து வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழியனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் 12ம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் முதலமைச்சர் எடியூரப்பா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். இதன் பின்னர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் முன்னர் கொரோனா தொற்றுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.