ஆந்திர மற்றும் தெலுங்கானா மக்களுக்கு பொங்கல் பரிசு அளித்த மோடி அரசு: என்னவென்று தெரியுமா?

செகந்திராபாதுடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-17 02:25 GMT

செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, விழாக்கள் கொண்டாடப்படும் இந்த மங்களகரமான சூழலில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பாரம்பரியத்தை இணைக்கும் மாபெரும் பரிசை இரு மாநிலங்களும் பெறுவதாகக் குறிப்பிட்டார்.


பண்டிகைகளை ஒட்டி, இரு மாநில மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்திய அவர், இந்திய ராணுவம் வீரத்திற்குப் பெயர் பெற்றது எனக் கூறினார். நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் பண்டிகைகளைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் இணைக்கவும் வாய்ப்பளிக்கும் வகையில், இந்திய ரயில்வேயும் நாட்டின் நீளம் மற்றும் அகலங்களைக் கடந்து ஒரே பாரதமாக இணைப்பதாக் குறிப்பிட்டார்.


வந்தே பாரத் விரைவு ரயில் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், செகந்திராபாத் -விசாகப்பட்டினம் இடையிலான பயண நேரம் குறையும் என்றும் தெரிவித்தார். வந்தே பாரத் புதிய இந்தியாவின் திறன் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம்" என்று கூறிய பிரதமர், "இது விரைவான வளர்ச்சியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இந்தியாவின் சின்னம்" என்றார். தனது கனவுகள் மற்றும் லட்சியத்தை நோக்கி ஆர்வமாக இருக்கும் இந்தியாவை, தனது இலக்கை அடைய விரும்பும் இந்தியாவை, சிறந்து விளங்க பாடுபடும் இந்தியாவை, தனது குடிமக்களுக்கு சிறந்ததை வழங்க விரும்பும் இந்தியாவை இந்த ரயில் பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். அடிமை மனப்பான்மையை உடைத்து தற்சார்பை நோக்கி இந்தியா செல்வதாகவும் பிரதமர் கூறினார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News