இனி ஒரு துப்புரவுப் பணியாளர் உயிர் கூட போகக்கூடாது - தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் அசத்தல் திட்டம்!
MoHUA to launch awareness campaign on SafaiMitra Suraksha Challenge
நவம்பர் 14 முதல் 20 வரை துப்புரவுப் பணியாளர் பாதுகாப்புச் சவால் குறித்த ஒரு வார கால விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது. உலக கழிப்பறை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது கடைபிடிக்கப்படுகிறது.
இதன்படி, மாநிலங்கள், நகரங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கன்டோன்மென்ட் வாரியங்களின் பங்கு மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விருது வழங்கும் விழா மற்றும் குப்பையில்லா நட்சத்திர சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நவம்பர் 20,அன்று நடைபெறுகிறது.
நாடு முழுவதும் நடத்தப்படும் துப்புரவுப் பணியாளர் பாதுகாப்புச் சவாலில் மொத்தம் 246 நகரங்கள் பங்கேற்கின்றன. ஆபத்துகளில் இருந்து துப்புரவுத் தொழிலாளர்களைக் காத்து இறப்புகளைத் தடுப்பதற்காக, கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க்குகளைச் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை இயந்திரமயமாக்குவதை ஊக்குவிப்பதை இந்தச் சவால் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மொத்தம் ரூ 52.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 115 நகரங்களில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஆதரவோடு துப்புரவுப் பணியாளர்களுக்கானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் NSKFDC மூலம் நடத்தப்பட்டுள்ளன.
Safaimitra Suraksha Challenge (SSC) திட்டத்தின் கீழ், 345 நகரங்களில் '14420' ஹெல்ப்லைன் எண்ணுடன், செப்டிக் டேங்க்கள்மற்றும் சாக்கடைகளை பாதுகாப்பாக சுத்தம் செய்வதற்கும், அபாயகரமான சுத்தம் குறித்த புகார்களைப் பதிவு செய்வதற்கும், கால் சென்டர் மற்றும் ஹெல்ப்லைன் எண்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
31 மாநிலங்களில் இவை நிறுவப்பட்டுள்ளன. பங்கேற்கும் 246 நகரங்களும் ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை (SUP) தடை செய்வதாக அறிவித்துள்ளன.