நிதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்! ஐ.நா சபை, உலக வங்கிக்காக பணியாற்றியவர்!
நிதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதிஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2016ம் ஆண்டு முதல் அமிதாப் கந்த் இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் 30ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நிதி ஆயோக்கின் புதிய சிஇஓவாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டு காலம் அல்லது மறு உத்தரவு வரும் வரை அந்த பதவியை பரமேஸ்வரன் ஐயர் வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1981ம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய அரசின் குடிநீர், வடிகால் துறையில் பல்வேறு சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்தவர். மத்திய அரசின் குடிநீர் வடிகால் வாரியத்துறையின் செயலாளராக பதவி வகித்த பரமேஸ்வரன் ஐயர் அத்துறையில் மேற்கொண்ட சிறப்பான பணிகள் மூலம் பாராட்டுதல்களைப் பெற்றார். 2009ம் ஆண்டு ஐஏஎஸ் பணியிலிருந்து விலகிய பின்னர் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களுக்காக பணியாற்றினார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தபோது அந்த திட்டத்தில் முக்கிய பணியாற்றுவதற்காக மீண்டும் தாயகம் திரும்பினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் கழிவறை வசதிகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.