தென் ஆப்பிரிக்காவில் இருந்து மாறுபட்ட கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்தியா - மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு!
Omicron virus - Centre alerts states to be vigil and proactive
தென் ஆப்பிரிக்காவில், 'ஒமிக்ரான்' என்ற மாறுபட்ட கொரோனா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற பி.1.1.529 என்ற மாறுபட்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா கவலையளிக்க கூடியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளை அபாய பிரிவு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தலில், அபாய பிரிவு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளிடம் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இந்த மாறுபட்ட கொரோனா வகை அச்சுறுத்தலாக உள்ளதால், இதை சமாளிக்க, கட்டுப்பாடு, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்துதல், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அனைத்து நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள், குறிப்பாக அபாய பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிப்பது அவசியம். அதற்கேற்ப நாட்டில் பரிசோதனை வசதிகளை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியா வரும் பயணிகளை மாநிலங்கள் தீவிரமாக பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அபாய பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பாதிப்பு உறுதியானால், அவர்களின் மாதிரிகளை 'இன்சாகாக்' பரிசோதனை மையங்களுக்கு முறையாக அனுப்ப வேண்டும்.