நாடு முழுவதும் டோல்கேட்டில் ‘பாஸ்டேக்’ இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்.!

நாடு முழுவதும் டோல்கேட்டில் ‘பாஸ்டேக்’ இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்.!

Update: 2021-02-15 09:28 GMT

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பணமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததால், வாகனங்கள் வெகுதூரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் எரிபொருள் செலவு அதிகரித்தது மட்டுமின்றி நேரமும் வீணாகியது. தனை கருத்தில் கொண்டு மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கின்ற ‘பாஸ்டேக்’ என்ற முறையை கடந்த 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 

பாஸ்டேக் ஸ்டிக்கர்களை வங்கிகள், பெட்ரோல் பங்குகளில் வாங்கிக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பிட்ட தொகையை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களின் முகப்புகளில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அப்படி ஸ்டிக்கர்கள் பொறுத்தப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது குறிப்பிட்ட தொகை மின்னணு முறையில் கழித்துக்கொள்ளப்படும். இதனால் வாகன ஓட்டிகள் எளிதில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். நேரமும் மிச்சமாகும். அனைத்து வாகன ஓட்டிகளும் பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு, பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று (15ம் தேதி) நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் ‘பாஸ்டேக்’ முறை கட்டாயமாகிறது என்று மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்று முதல் அனைத்து வழித்தடங்களிலும் பாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது. எனவே பாஸ்டேக் ஸ்டிக்கர் இருந்தால் மட்டுமே வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கடக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

Similar News