145 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி! இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 'யுனிசெஃப்' ஒப்பந்தம்!

145 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி! இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் 'யுனிசெஃப்' ஒப்பந்தம்!

Update: 2021-02-05 18:08 GMT
உலகளவில் 145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகம் செய்வது தொடர்பாக இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக 'யுனிசெப்'  அறிவித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் உலகளவில் தடுப்பூசி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை கண்டுபிடித்த ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர, அமெரிக்காவின், 'நேவாவேக்ஸ்' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.

யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரெட்டா போர் கூறுகையில், யுனிசெப், 'கோவக்ஸ்' திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து ஏழை நாடுகளுக்கு வழங்க உள்ளது. சீரம் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' மற்றும் 'நோவாவேக்ஸ்' கொரோனா தடுப்பூசி மருந்துகளை நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் செய்ய யுனிசெப் ஒப்பந்தம் செய்துள்ளது.

110 கோடி டோஸ்  தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து, 145 நாடுகளில் உள்ள, ஏழை மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு செலுத்த உள்ளோம். ஒரு டோஸ் தடுப்பூசி மருந்தின் சராசரி விலை, 225 ரூபாய் ஆக இருக்கும். இந்த திட்டத்திற்கு ஏராளமான அமைப்புகள் நிதியுதவி செய்துள்ளன. கோவக்ஸ் திட்டத்தில், அமெரிக்காவின் பைசர் – பயோடெக் கூட்டு நிறுவனத்திடம், நடப்பு முதல் காலாண்டில், 12 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து பெறப்பட்டு 18 நாடுகளுக்கு வழங்கப்படும்.

மொத்தம் 4 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படும். கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, அமெரிக்க சுகாதார கழகம் ஆராய்ந்து வருகிறது. ஒப்புதல் அளித்த பின், ஆப்கன் முதல் ஜிம்பாப்வே வரை தடுப்பூசி மருந்து வினியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Similar News