சீன செயலிகளுக்கு பதிலாக புதிய செயலிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.15 இலட்சம் வரை பலவகை பரிசுகள் - அடல் இனோவேஷன் மிஷன் அறிவிப்பு.!

சீன செயலிகளுக்கு பதிலாக புதிய செயலிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.15 இலட்சம் வரை பலவகை பரிசுகள் - அடல் இனோவேஷன் மிஷன் அறிவிப்பு.!

Update: 2020-07-06 04:53 GMT

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறிய செயல்பாடுகளால் இந்தியா சீனா ராணுவம் இடையே நடந்த மோதலின் காரணமாக சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தடை விதித்தது.

இந்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் எனவும் இதற்காக "ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு" என்ற சவாலில் பங்கேற்கும் படியும் இந்திய இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நேற்று அழைப்பு விடுத்தார்.

உங்களிடம் இதுபோன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான பார்வை மற்றும் தனித்திறன்கள் உங்களிடம் இருப்பதாக உணர்ந்தால் இந்த சவால் உங்களுக்கானது என்று கூறிய அவர் இதற்கான போட்டி ஓன்று உள்ளதாகவும் கூறினார்

அதன்படி தற்போது சுயசார்பாக செயலிகளை வடிவமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஆத்ம நிர்பார் பாரத் (Bharat Apps) என்ற அடிப்படையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதற்காக அடல் இனோவேஷன் மிஷன் மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்கிறது.

ஆத்ம நிர்பார் பாரத் செயலி தயாரிப்பின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உருவாக்கப்படும் மென்பொருளின் தேவையை அதிகரிக்கவும், உலக தரத்தில் உயர்த்தவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், முதல் கட்டமாக தற்போதுள்ள இந்திய செயலிகளுக்கான மென்பொருளை மேம்படுத்தவும், இரண்டாவதாக புதிய செயலிலை உருவாக்கும் வகையில் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியில்தான் தொழில்நுட்பத் துறையினர் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியள்ளார்.

முதல் கட்ட நடைமுறையில் பல சிறப்பு பரிசுகளும் மற்றும் ரொக்கமும் வழங்கப்படும் என்றும், இரண்டாம் கட்டமாக வளர்ச்சி, முன்மாதிரி, சந்தை செயல்திட்டம் போன்றவை குறித்து பயிற்சியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப தீர்வுகளை கண்டறிய உதவும் தயாரிப்புகளை உருவாக்க வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சுயசார்ப்பு செயலி உருவாக்க திட்டத்தில், ஆன்லைன் வழி கற்றல், சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு, உடல் நலம் சார்ந்த விஷயங்கள், வேளாண்மை மற்றும் நிதி தொழில்கள், செய்தி, மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் தளங்களில் செயலிகளை மேம்படுத்த பரீசிலனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சவாலில் பங்கேற்க வரும் 18 ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்ட அரசு தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை உருவாக்கும் சவாலில் வெற்றி ( 8 பிரிவுகளில்) பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.20 லட்சமும், 2 ஆம் பரிசாக ரூ.15 லட்சமும், 3 ஆம் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 முக்கிய பிரிவுகளில் உட்பிரிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கும் பரிசு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவுகளில் வெற்றி பெறுவோருக்கும் முதல் பரிசாக ரூ.5 லட்சமும், 2 ஆம் பரிசாக ரூ.3 லட்சமும், 3 ஆம் பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்ள https://innovate.mygov.in/app-challenge/ என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

nc42.com/buzz/after-banning-chinese-apps-modi-kickstarts-aatmanirbhar-bharat-app-innovation-challenge/

Similar News