ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் நிலக்கரி ஊழல் : 5 பேருக்கு சிறை தண்டனை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் நிலக்கரி ஊழல் : 5 பேருக்கு சிறை தண்டனை
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, கடந்த 2004 முதல் 2009 வரை மேற்கு வங்கத்தில் உள்ள 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் ₹1.86 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா, முன்னாள் இணை செயலாளர் கே.எஸ். குரோவா, முன்னாள் இயக்குநர் கே.சி.சாம்ரியா, விகாஷ் மெட்டல்ஸ் மேலாண்மை இயக்குநர் விகாஷ் பாட்னி, அதன் நிறுவன மூத்த அதிகாரிகள் 2 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பிரஷார், குற்றவாளிகள் மீதான குற்றத்தை உறுதி செய்தார். இந்த நிலையில் அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. நிலக்கரித் துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா, முன்னாள் இணை செயலாளர் கே.எஸ். குரோவா, முன்னாள் இயக்குநர் கே.சி.சாம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இது போலவே விகாஷ் மெட்டல்ஸ் மேலாண்மை இயக்குநர் விகாஷ் பாட்னி, ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்த நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Similar News
Copyright @2023
Powered by Hocalwire