#Opinion : அமித் ஷா vs பிரசாந்த் கிஷோர் - மேற்கு வங்கத்தில் யார் முந்துகிறார்?
மேற்கு வங்கத்தில் பாஜக மக்கள் ஆதரவை விரைவாகப் பெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் அமித் ஷா மற்றும் பிரசாந்த் கிஷோருக்கு தான் இந்த முறை போட்டி. COVID-19 தொற்றுநோய் பரவல், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.க. வின் பிரச்சாரத்திற்கு ஒரு தடையாக செயல்படவில்லை. ஆனால் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வின் தீவிரமான பிரச்சாரத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், தலையில்லாத கோழியைப் போலவே செயல்படுகிறது. இதன் விளைவாக, முந்தைய மதச்சார்பற்ற, இப்போது பெங்காலி-பேரினவாதக் கட்சியாக மாறி இருக்கும் TMC, பல தவறான மற்றும் அபாயகரமான சமூக ஊடக பிரச்சாரங்களைத் தொடங்க வேண்டியிருந்தது.
தன்னைத் தானே "முதன்மை அரசியல் தந்திரவாதி" என்று அழைத்துக் கொள்ளும் பிரசாந்த் கிஷோரின் தவறான தேர்தல் திட்டங்களுக்கு இணங்க, TMC இப்போது "ஷோஜா பங்களே போல்ச்சி" (நேரடியான பெங்காலி மொழியில் பேசுகிறது) என்ற நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. TMC மாநிலங்களவை தலைவர் - டெரெக் ஓ பிரையன் பேசும் வீடியோ கிளிப்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணிக்கு வெளியிடப்படும். இந்த தொடர் அடுத்த சில மாதங்களுக்கு சமூக ஊடகங்களில் இயங்கும் என்று TMC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ் வங்காளம் கடந்த ஒன்பது ஆண்டுகளில் எவ்வாறு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை வீடியோக்கள் வெளிப்படுத்தும். மேலும் கூட்டாட்சி எவ்வாறு அழிந்துவிட்டது, மாநிலங்கள் உரிமை எவ்வாறு பறிக்கப்பட்டன என்பதும் அடங்கும்," என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இத்தகைய புளித்துப் போன மற்றும் சலிப்பான பிரச்சாரத்தை தொடங்குவது TMC அணிகளில் ஒரு பெரிய மாற்றத்தினால் வருகிறது, இதன் மூலம் மம்தா பானர்ஜி பழைய ஆட்களை தூக்கி விட்டு, புதிய மற்றும் இளமை முகங்களுடன் களமிறங்குகிறார். இதற்காக பிரஷாந்த் கிஷோர் வங்காளத்தில் ஒரு வருட கால கணக்கெடுப்பை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது, அப்போது பா.ஜ.க. வில் சேரலாம் என்று அவர் கருதிய ஆட்களை அடையாளம் காட்டினார்.
கடந்த சில மாதங்களில் TMC, பிரசாந்த் கிஷோரின் தவறான யோசனைகளின் கீழ் பல திட்டங்களைக் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு மக்கள் தங்கள் குறைகளை முன்வைக்க ஒரு ஹெல்ப்லைன் எண் மற்றும் வலைத்தளத்துடன் தொடங்கப்பட்ட "திதி கே போலோ (தீதியிடம் சொல்லுங்கள்)" திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கடுமையாக தாக்கப்பட்டது. 'தீதி' (மம்தா பானர்ஜி) ஐ 'மக்கள் முதல்வராக' காட்டத் திட்டமிடுவதே இந்த நோக்கத்தின் யோசனையாக இருந்தது. இருப்பினும், 'திதி கே போலோ' மம்தா பானர்ஜிக்கு தோல்வியாக மாறியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவரது அரசியல் ஆலோசகர், பிரசாந்த் கிஷோரின் குழு I-PAC, 80 சதவீத TMC எம்.எல்.ஏக்கள், கட்சித் தலைவரான மம்தா பானர்ஜியின் 'திதி கே போலோ' திட்டத்தைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டதாக வெளிப்படுத்தியிருந்தது.