மத்திய அரசின் நடவடிக்கையால் திருந்தி வாழ முன்வந்த மாவோயிஸ்டுகள் - சத்தீஸ்கரில் 18 பேர் சரணடைந்து உறுதிமொழி!
மத்திய அரசின் நடவடிக்கையால் திருந்தி வாழ முன்வந்த மாவோயிஸ்டுகள் - சத்தீஸ்கரில் 18 பேர் சரணடைந்து உறுதிமொழி!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 18 மாவோயிஸ்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர்.
மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் நடவடிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சாலை வசதி இல்லாத வடகிழக்கு மாநில கிராமங்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி போன்றவை செய்து கொடுத்து, அப்பகுதி குழந்தைகள் கல்வி அறிவு பெறத்தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீவிராவத தடுப்பு நடவடிக்கையின் பலனாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 18 மாவோயிஸ்டுகள் மாவட்ட கலெக்டர் தீபக் சோனி, போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவ் ஆகியோர் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர். அத்துடன், இனி திருந்தி வாழ்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க சிறப்பு காவல் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், மாவோயிஸ்டுகள் வன்முறை பாதையை கைவிட்டு சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழவும், அவர்களின் மறுவாழ்வுக்கும் ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறது.