லஞ்சம் வாங்குவோருக்கு தூக்கு தண்டனை அல்லது சொத்துக்களை பறிமுதல் செய்து, தேச விரோத வழக்கு தொடுக்க வேண்டும்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து.!

லஞ்சம் வாங்குவோருக்கு தூக்கு தண்டனை அல்லது சொத்துக்களை பறிமுதல் செய்து, தேச விரோத வழக்கு தொடுக்க வேண்டும்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து.!

Update: 2019-02-25 13:04 GMT

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என
மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.


மதுரையை சேர்ந்த பரணிபாரதி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில்," தான், 30.12.2018-ல் நடந்த 325 மின் வாரிய உதவி பொறியாளர்களுக்கான தேர்வில் தேர்வெழுதியதாக கூறியுள்ளார். அப்போது, எழுத்துத்தேர்வுக்கு முன்பு கேள்வித்தாள் வெளியானது எனவும் இது தொடர்பான விசாரணை முடிந்தும் கேள்வித்தாள் வெளியானது எப்படி? என்பது தற்போது வரை தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் ஒரு பணிக்கு 5 பேர் வீதம் 1575 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும் இதனால் உதவி பொறியாளர் நியமன நடைமுறைக்கும், நியமன உத்தரவு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் இதற்காக நடந்த எழுத்துத்தேர்வை ரத்து செய்து, புதிதாக எழுத்துத்தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள், மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான விடைகளும் சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? இதனால் மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும் அரசு துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது எனவும், அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது எனவும் நீதிபதிகள் கூறினர்.


லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சப் பழக்கம் ஒழியும், லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும் என கருத்து தெரிவித்து, வழக்கு விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Similar News