அகில இந்திய அளவில் ஐ.ஐ.டி மெட்ராஸ் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்து அபார சாதனை.!
அகில இந்திய அளவில் ஐ.ஐ.டி மெட்ராஸ் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்து அபார சாதனை.!
நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்.ஐ.ஆர்.எஃப்) வெளியிட்ட தரவரிசைப்படி, ஐ.ஐ.டி-மெட்ராஸ் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நாட்டின் முதலிடம் வகிக்கிறது. இது தவிர, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் டெல்லி, பி.ஜி.ஐ. சண்டிகருக்கு அடுத்து 3 வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அண்ணா பல்கலைகழகம் 7- ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 3,771 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசை செயல்பாட்டில் பங்கேற்றன. தரவரிசை கட்டமைப்பானது, கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (டி.எல்.ஆர்), ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை நடைமுறை (ஆர்.பி.), பட்டமளிப்பு முடிவுகள் (ஜி.ஓ), அவுட்ரீச் மற்றும் உள்ளடக்கம் (ஓ.ஐ) மற்றும் கருத்து (பி.ஆர்) ஆகிய ஐந்து பரந்த பொதுவான அளவீடுகளைக் கொண்டு சிறந்த கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறது. இந்த ஐந்து பரந்த அளவுருக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த தர நிலைகள் வழங்கப்படுகின்றன.
ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி) இடம் பெற்றுள்ளன – முதல் இடத்தில் ஐ.ஐ.டி மெட்ராஸ், இரண்டாம் இடத்தில் ஐ.ஐ.டி டெல்லி, மூன்றாம் இடத்தில் ஐ.ஐ.டி பம்பாய், நான்காம் இடத்தில் ஐ.ஐ.டி கோரக்பூர், 5 ஆம் இடத்தில் ஐ.ஐ.டி கான்பூர், ஆறு மற்றும் 7 ஆம் இடத்தில் ஐ.ஐ.டி குவஹாத்தி மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கி. தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இதே போல மருத்துவக் கல்லூரிகளில், எய்ம்ஸ், டெல்லி முதலிடத்தையும், பி.ஜி.ஐ, சண்டிகர் மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி (சி.எம்.சி.) 3 வது இடத்தையும் பிடித்துள்ளதாக மனித வள மேம்பாட்டுத்துறையின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.