சீமான், ஹரி நாடார் மீது பாயும் குற்றச்சாட்டு - வீட்டில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நடிகை விஜயலெட்சுமி : சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த காயத்ரி ரகுராம்!

சீமான், ஹரி நாடார் மீது பாயும் குற்றச்சாட்டு - வீட்டில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நடிகை விஜயலெட்சுமி : சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த காயத்ரி ரகுராம்!

Update: 2020-07-27 04:36 GMT

சமீப காலமாக நடிகர் சீமான் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த நடிகை விஜயலெட்சுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீமான் தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல் வந்ததால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி, அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், சீமானின் குடும்ப பின்னணி குறித்து விஜயலெட்சுமி பேசியதாக கூறப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து நடிகர் சீமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், விஜயலெட்சுமியின் நாக்கு அறுத்து எரியப்படும் என்று எச்சரிக்கை விடுத்து, அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். 

இந்த நிலையில் சீமான் தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி வீடியோ வெளியிட்ட விஜயலெட்சுமி, ரத்த அழுத்த நோய்க்கு சாப்பிடும் மாத்திரையை அதிக அளவில் எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

வீடியோ வெளியானதை சரியான நேரத்தில் பார்த்துவிட்டு, விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற நடிகை காயத்ரி ரகுராம், மயக்க நிலையில் இருந்த விஜயலெட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த விஜயலட்சுமியின் சகோதரி உஷா, தங்களுக்கு பணமோ, பொருளோ தேவையில்லை நிம்மதியாக வாழவிட்டால் போதும் என்று கூறினார்.

சீமானுக்கு எதிராக பலமுறை விஜயலெட்சுமி கடுமையான விமர்சனங்களை முகநூலில் முன்வைத்து வருகிறார் என்ற போதிலும், ஒரு முறை கூட பொது வெளியில் விஜயலெட்சுமியின் கேள்விகளுக்கு நடிகர் சீமான் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Similar News