கடலூர் அரசு ஆஸ்பத்திரி: சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி - நர்சு பணியிடை நீக்கம்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் அருகே உள்ள கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் சாதனா. சளியால் பாதிக்கப்பட்ட சாதனாவை கருணாகரன் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர் ஊசி போடுவதற்கும் மாத்திரைக்கும் சீட்டு எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிய கருணாகரன் தனது மகளை ஊசி போடும் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பணியில் இருந்த கடலூரை சேர்ந்த நர்ஸ் கண்ணகி சாதனாவுக்கு இரண்டு ஊசி போட்டுள்ளார் . இதை பார்த்த கருணாகரன் "சளி தொல்லைக்கு இரண்டு ஊசியா?" என்று கேட்டார். அப்போதுதான் நர்ஸ் கண்ணகி தவறுதலாக நாய் கடிக்குரிய ஊசி போட்டது தெரியவந்தது .இதை அடுத்து பணியில் கவனம் குறைவாக செயல்பட்ட கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால் உத்தரவிட்டார்.