வீடுகளுக்கான மின்கட்டணம் ரத்து செய்யப்படுகிறதா ? என்ன சொல்கிறது வாரியம்?
வீடுகளுக்கான மின்கட்டணம் ரத்து செய்யப்படுகிறதா ? என்ன சொல்கிறது வாரியம்?
கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் 1200-க்கும் மேற்பட்டோரை தாக்கியிருப்பது ஒருபுறமிருக்க, பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரத்தையும் பறித்திருக்கிறது. அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் குறித்த அச்சமும், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 90% மக்களின் வாழ்வாதாரங்களை பறித்திருக்கின்றன. அரசு ஊழியர்கள், அமைப்பு சார்ந்த பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் தான் ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்த இரு பிரிவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அளவு 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கும். அமைப்பு சார்ந்த பணியாளர்களில் கூட குறிப்பிட்ட பிரிவினருக்கு ஊதியக் குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம் தமிழகத்தின் பெரும்பான்மை தொழிற்பிரிவான உழவர்கள் வாழ்வாதாரங்களை இழந்தது மட்டுமின்றி, பாடுபட்டு விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
மற்றொருபுறம் ஊரடங்கு காரணமாக அனைத்துத் தரப்பினரும் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பதால், வீடுகளின் மின்சாரப் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் சராசரி மின்பயன்பாடு ஒரு நாளைக்கு 32 கோடி யூனிட்டுகள் ஆகும். தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் மூடப் பட்டு உள்ள நிலையில் மின்பயன்பாடு சராசரியாக 40% குறைந்து 19.80 கோடி யூனிட்டுகள் ஆகியிருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டின் நேற்றைய மின்பயன்பாடு 24.09 கோடி யூனிட்டுகள் ஆகும். இது இயல்பான அளவை விட 20 விழுக்காட்டுக்கும் கூடுதலான பயன்பாடு ஆகும். ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் அடங்கியிருப்பதால் தான் மின்சாரப் பயன்பாடு பெருமளவில் அதிகரித்திருக்கிறது.