காங்கிரஸ் தரும் அழுத்தத்தால் என்னால் முதல்வராக பணியாற்ற முடியவில்லை, கிளார்க் போல வேலை செய்கிறேன் : குமாரசாமி குமுறல்

காங்கிரஸ் தரும் அழுத்தத்தால் என்னால் முதல்வராக பணியாற்ற முடியவில்லை, கிளார்க் போல வேலை செய்கிறேன் : குமாரசாமி குமுறல்

Update: 2019-01-10 18:35 GMT
காங்கிரஸ்காரர்கள் தரும் அழுத்தத்தால் என்னால் சுதந்திரமாக முதல்வர் என்ற முறையில் செயல்படவில்லை. சாதாரணமான கிளார்க் போல செயல்படும் நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். அதனால் தான் விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவானது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது கட்சிக்காரர்களுடனான கூட்டத்தில் மனமுருக பேசியுள்ளார்.
கர்நாடகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதாதளம் இடையே திடீர் கூட்டணி உருவாகி குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார். காங்கிரசின் ஆதரவால் அவருடைய ஆட்சி சொற்ப மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டது. ₹26,000 கோடி மதிப்பிலான இந்த கடன் தள்ளுபடி திட்டத்தில் மொத்தம் 800 பெரிய விவசாயிகளுக்கே கடன் திட்டம் பயனளித்தது. அதுவும் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சியிலுள்ள வேண்டப்பட்ட விவசாயிகளுக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளித்தது என புகார் கூறப்பட்டது. இதனால் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து நஷ்டமடைந்த பல இலட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். சென்ற மாதத்திலும் இந்த மாதத்திலும் மட்டும் இது வரை எட்டு விவசாயிகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஒரே விவசாயி குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடன் தள்ளுபடி கிடைக்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த மாநிலத்தில் மிகப்பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று முதல்வர் குமாரசாமி தலைமையில் அவரது கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.எல்.சி-க்களின் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கடன் தள்ளுபடி விவகாரத்தில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்தும் காங்கிரஸ் சார்புடைய விவசாயிகள் மட்டும் பயனடைந்த விவகாரம் குறித்தும் அனைவரும் முதல்வரிடம் கடுமையாக விமர்சித்தனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சிக்கு தொகுதி  ஒதுக்கீடு செய்வதில் காங்கிரசார் செய்யும் ஆதிக்கம் குறித்தும் விவாதம் செய்தனர்.
அப்போது முதல்வர் குமாரசாமி பேசுகையில் உங்கள் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையில் என்னால்  முதல்வராக பணிபுரிய முடியவில்லை. காங்கிரசார் ஒவ்வொரு விவகாரத்திலும் மூக்கை நுழைப்பதால் அவர்கள் தரும் அழுத்தத்தினால் நான் ஒரு கிளார்க் போல பணியாற்றுகிறேன். விரைவில் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்" என பேசியுள்ளார். முதல்வரின் இந்த பேச்சு கட்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் காங்கிரஸ் - குமாரசாமி கட்சி இடையே உறவு முறிந்து ஆட்சி கவிழலாம் என்ற நிலை சூழ் நிலை உருவாகியுள்ளது.

Similar News