நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் `சமூக அவசரநிலை பிரகடனம்' என்பது போல் இப்போதைய சூழ்நிலை உள்ளது, கடும் முடிவுகள் எடுக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது : பிரதமர்
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் `சமூக அவசரநிலை பிரகடனம்' என்பது போல் இப்போதைய சூழ்நிலை உள்ளது, கடும் முடிவுகள் எடுக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது : பிரதமர்
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், ஒட்டுமொத்த உலகமே கொவிட்-19 என்ற மிகப் பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது என்று கூறினார். இப்போதைய சூழ்நிலை மனிதகுல வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காலகட்டமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதன் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு நம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தருணமாக இது இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக மத்திய அரசின் முயற்சிகளில் ஆதரவுடன் செயல்படும் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு, இணைந்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் மூலம் ஆக்கபூர்வமான, நேர்மறை அரசியல் சூழ்நிலை நாட்டில் உருவாகியுள்ளது என்று பிரதமர் கூறினார்.
சமூக இடைவெளியை பின்பற்றுதல், மக்கள் ஊரடங்கு அல்லது முடக்கநிலை அமலை பின்பற்றுவதில், உரிமையுடன் பங்கேற்றல், அர்ப்பணிப்பு மற்றும் மக்களின் உறுதிப்பாடு குறித்து அவர் பாராட்டு தெரிவித்தார். தற்போது உருவாகி வரும் சூழ்நிலையில், ஆதார வளங்கள் பற்றாக்குறையின் தாக்கம் குறித்து அவர் கோடிட்டுக் காட்டினார். இருந்தபோதிலும், இதுவரையில் இந்த வைரஸ் பரவுதலை வெற்றிகரமாகக் குறைந்த அளவுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருப்பதால், எந்த நேரத்திலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.
நாட்டில் இப்போதுள்ள நிலைமை `சமூக அவசர நிலை பிரகடனம்' போல உள்ளது என்றும் பிரதமர் கூறினார். கடுமையான முடிவுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் நிபுணர்கள், இந்த முடக்கநிலை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டிருப்பதாக பிரதமர் திரு. மோடி தெரிவித்தார். சூழ்நிலைகள் மாறிவரும் அதேநேரத்தில், பணி கலாச்சாரம் மற்றும் பணி நடைமுறையில் நாம் மாற்றம் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார் பிரதமர். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு அரசு முதல் முன்னுரிமை தரும் என்று அவர் வலியுறுத்தினார்.