டி.என்.பி.எஸ்.சிக்கு தொடர்ந்து அவமானங்கள்: மக்கள் நம்பிக்கையை இழந்ததால் சி.பி.ஐ விசாரணை கட்டாயம் தேவை!
டி.என்.பி.எஸ்.சிக்கு தொடர்ந்து அவமானங்கள்: மக்கள் நம்பிக்கையை இழந்ததால் சி.பி.ஐ விசாரணை கட்டாயம் தேவை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 2019 இல் நடத்திய எழுத்துத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்தது அம்பலமாகி, அதில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தரத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேட்டில் தொடர்புடைய இடைத் தரகர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரிவான விடையளிக்கும் எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் இல்லாதவை குரூப் - 2 ஏ, குரூப் - 4 தேர்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 'அப்ஜெக்டிவ்' வகையில் வினாத்தாள்கள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே, சரியான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் வேலை உறுதி செய்யப்படும். எனவே, குரூப் - 1, குரூப் - 2 தேர்வுகளில் வெற்றி பெறாதவர்கள் கடைசி வாய்ப்பாக இந்தத் தேர்வுகளை கருதி, தீவிரமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசாரணைகள் முடியாதிருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வுகளில் வேறு எந்த மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை என்று அவசர அவசரமாகக் கூறியது பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னர் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-2 தேர்வின் போது வினாத்தாள்கள் வெளிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே டிஎன்பிஎஸ்சி தன்னுடைய நடவடிக்கைகளைக் கடுமையாக்கி இருந்தால் இன்றைக்கு ஏற்பட்ட முறைகேடுகளைத் தவிர்த்திருக்க முடியும்.
ஏதோ ஒரு வகையில் டிஎன்பிஎஸ்சி தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் முறைகேடுகளை நடத்துவதற்கு வாய்ப்பை வழங்குகிற வகையில் ஏற்பாடுகள் நடந்திருப்பதாக நம்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இத்தகைய முறைகேடுகளை அரசு மேலிடத்தின் ஆதரவில்லாமல் இடைத்தரகர்களால் நிச்சயம் செய்ய முடியாது.
தேர்வு முறைகேடுகளுக்கான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களோடு இப்பிரச்சினை முடிந்து விடக் கூடியதல்ல. இது 16 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இதுகுறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் இடைத்தரகர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் உதவியுடன் அழியும் மையால் தேர்வு எழுதி, பிறகு வேறு ஒரு மை மூலம் அதையே திருத்தி எழுதும் வகையில் இந்த முறைகேடு நடந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரக்கூடியதாக உள்ளது.