கொரோனாவை சீக்கிரம் கட்டுப்படுத்த தவறினால் உலகில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்படலாம்: உலக சுகாதார நிறுவன நிர்வாகிகள் எச்சரிக்கை..
கொரோனாவை சீக்கிரம் கட்டுப்படுத்த தவறினால் உலகில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்படலாம்: உலக சுகாதார நிறுவன நிர்வாகிகள் எச்சரிக்கை..
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறினால் உலகில் உணவுப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை நிர்வாகி டெட்ரோஸ் அதனோம் கேப்ரியாசுஸ், ஐக்கிய நாடுகள் (UN) சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைவர் சு டோங்யு, உலக வர்த்தக அமைப்பின் (WTO) இயக்குநர் ரோபெர்டோ அஸ்விடோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதால், அனைத்துலக வர்த்தகம் மற்றும் உணவு வழங்கல் சங்கிலிகள் மிகவும் மெதுவடைந்துள்ளன.
தனிமைப்படுத்தப்படுவோர் பதற்றம் காரணமாக அதிகப்படியாக வாங்கிக் குவிப்பதால் பேரங்காடிகளின் அலமாரிகள் காலியாக இருப்பதுடன் பொருள் வழங்கல் சங்கிலிகளின் வலுவற்ற நிலை இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.
"உணவு இருப்பு தொடர்பான நிச்சயமின்மை, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு வழி வகுக்கும்; அதனால் உலகச் சந்தையில் பற்றாக்குறை ஏற்படும்," என இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து நேற்று (ஏப்ரல் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
அனைத்துலக அளவில் 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரிசியை அதிகம் விளைவிக்கும் இந்தியா, வியட்னாம் போன்ற நாடுகள், உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் பொருட்டு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்திவிட்டன.
விளைவு? வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றில் அரிசியின் விலை ஏகத்துக்கு உயர்ந்து 'உணவுக் கலவரம்' ஏற்பட்டது.
அதேபோல, ரஷ்யாவில் உணவுப் பொருட்களின் விலை உள்நாட்டில் உயராமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், இருப்பில் இருந்த கோதுமையும் பயன்படுத்தப்படுவதால், அங்கும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் உள்ளன.