கொரோனாவை சீக்கிரம் கட்டுப்படுத்த தவறினால் உலகில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்படலாம்: உலக சுகாதார நிறுவன நிர்வாகிகள் எச்சரிக்கை..

கொரோனாவை சீக்கிரம் கட்டுப்படுத்த தவறினால் உலகில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்படலாம்: உலக சுகாதார நிறுவன நிர்வாகிகள் எச்சரிக்கை..

Update: 2020-04-03 13:58 GMT

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறினால் உலகில் உணவுப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை நிர்வாகி டெட்ரோஸ் அதனோம் கேப்ரியாசுஸ், ஐக்கிய நாடுகள் (UN) சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைவர் சு டோங்யு, உலக வர்த்தக அமைப்பின் (WTO) இயக்குநர் ரோபெர்டோ அஸ்விடோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகள் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதால், அனைத்துலக வர்த்தகம் மற்றும் உணவு வழங்கல் சங்கிலிகள் மிகவும் மெதுவடைந்துள்ளன.

தனிமைப்படுத்தப்படுவோர் பதற்றம் காரணமாக அதிகப்படியாக வாங்கிக் குவிப்பதால் பேரங்காடிகளின் அலமாரிகள் காலியாக இருப்பதுடன் பொருள் வழங்கல் சங்கிலிகளின் வலுவற்ற நிலை இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

"உணவு இருப்பு தொடர்பான நிச்சயமின்மை, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு வழி வகுக்கும்; அதனால் உலகச் சந்தையில் பற்றாக்குறை ஏற்படும்," என இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து நேற்று (ஏப்ரல் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

அனைத்துலக அளவில் 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரிசியை அதிகம் விளைவிக்கும் இந்தியா, வியட்னாம் போன்ற நாடுகள், உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் பொருட்டு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்திவிட்டன.

விளைவு? வளர்ந்துவரும் நாடுகள் பலவற்றில் அரிசியின் விலை ஏகத்துக்கு உயர்ந்து 'உணவுக் கலவரம்' ஏற்பட்டது.

அதேபோல, ரஷ்யாவில் உணவுப் பொருட்களின் விலை உள்நாட்டில் உயராமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், இருப்பில் இருந்த கோதுமையும் பயன்படுத்தப்படுவதால், அங்கும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் உள்ளன.

"கொவிட்-19க்காக நடமாட்டம் கட்டுப்படுத்தும் வேளையிலும் வர்த்தகம் எப்போதும்போல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் உணவுப் பொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம்," என்று அறிக்கை தெரிவித்தது.

குடிமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில் உணவு வழங்கல் சங்கி தடைப்படாமல் இருப்பதை உறுதி எய்வதற்கான வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றது அது.

"விவசாயிகளை வேலை செய்யவிடாமல் தடுப்பது, எல்லைகளில் உணவுப்பொருட்கள் நகர்வைத் தாமதப்படுத்துவது போன்றவற்றால் உணவுப்பொருட்கள் கெட்டு பாழாய்ப் போய்விடும்," என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

"உணவுப் பற்றாக்குறை நெருக்கடியின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்," என்று FAOவின் மூத்த பொருளியலாளர் அப்டோல்ரெஸா அப்பாசியன் கூறினார்.

இதற்கிடையே, இந்தியாவில் நடப்பில் உள்ள ஊரடங்கு காரணமாக அறுவடைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடைக் காலத்தில் நாட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து பெருவாரியான பணியாளர்கள் வேலையில் இறக்கப்படுவர். ஆனால், அது இப்போது இயலாமல் போயுள்ளது.

sg/coronavirus/story20200402-42166.html?utm_source=emarsys&utm_medium=email&utm_campaign=tm_newsletter&utm_content=03/04/2020  

Similar News