'இந்தியாவின் படைப்பாற்றலை உலகம் உணர்ந்து கொண்டது' ; தன்னம்பிக்கையுடன் வளர்ந்த பாரதமாக திகழ்ந்துவரும் இந்தியா- பிரதமர் மோடி!
ராமர் கோவிலால் நாடு முழுவதும் உற்சாகம் நிலவுவதாகவும் ராமர் குறித்து புதிய பாடல்களை மக்கள் இயற்றி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசி வருகிறார். அதுபோல 108 வது நிகழ்ச்சியில் நேற்று அவர் பேசினார். இது 2023- ஆம் ஆண்டின் கடைசி நிகழ்ச்சியாகும். இதில் சத்குரு, ஜக்கி வாசுதேவ், பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஹெர்மன் பிரீத் கவுர், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் , நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் உடல் திறன் குறித்து பயனுள்ள தகவல்களை அளித்தனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியா தன்னம்பிக்கையுடன் திகழ்ந்து வருகிறது. வளர்ந்த பாரதம் என்ற உணர்வும் இருக்கிறது. தற்சார்பு நிலையும் காணப்படுகிறது. 2024 ஆம் ஆண்டிலும் இந்த உணர்வு நீடிக்க வேண்டும். புதுமை கண்டுபிடிப்புகளின் கூடமாக இந்தியா திகழ்கிறது. மனநலமும் உடல் நலமும் முக்கியம். இந்த ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உட்பட பல்வேறு சிறப்பு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலால் ஒட்டுமொத்த நாட்டிலும் உற்சாகமும் ஆர்வமும் கரைபுரண்டு ஓடுகிறது. நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக ராமர் பற்றியும் அயோத்தி பற்றியும் புதிய பாடல்களையும் பஜனைகளையும் உருவாக்கி வருவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.
எனவே கலை உலகமும் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் நிகழ்வில் தனது பங்களிப்பை தனக்கே உரிய பாணியில் அமைத்துள்ளது. அனுபவம் வாய்ந்த கலைஞர்களும் வளர்ந்து வரும் கலைஞர்களும் ராமர் பற்றிய புதிய பஜனைகளை உருவாக்கி வருகிறார்கள். சிலர் புதிதாக கவிதைகள் எழுதி வருகிறார்கள். நான் சில ராமர் பஜனைகளையும் பாடல்களையும் எனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளேன். அது போல் பொதுவான ஒரு ஹேஷ் டேக்கில் அனைவரும் ராமர் பாடல்களை வெளியிட்டால் நல்லது என்று எனக்கு ஒரு யோசனை பிறந்தது. ஆகவே அனைவரும் தங்களது படைப்புகளை ஸ்ரீ 'ராம்பஜன் என்ற ஹேஷ் டேக்கில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.