"கொஞ்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களையும் கவனிங்க" - அதிரடி கோரிக்கை விடுத்த சீமான்..!

Update: 2021-05-28 03:30 GMT

கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி செய்வதறியாது தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கொரோனா பரவல் காரணமாக அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அவற்றில் பணிபுரிந்த இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் வருமானமின்றித் தவித்து வருவதும், தனியார் பள்ளிகள் முழுவதுமாகக் கைவிட்ட நிலையில் தமிழக அரசும் அவர்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் மிகுந்த வேதனையைத் தருகிறது.


ஊரடங்கு போடப்பட்ட கடந்தாண்டிலிருந்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முழுச்சம்பளமும் வழங்கப்பட்டு வரும் நிலையில், பல தனியார் பள்ளிகளோ ஐம்பது விழுக்காடு ஆசிரியர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கும் மிகக்குறைவான ஊதியத்தையே வழங்கி வருகின்றன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாத நிலையில் வேறு வேலையின்றி, வருமானத்திற்கு வேறு வாய்ப்பின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், தங்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைகூட நிறைவேற்ற முடியாத இயலாமை நிலை காரணமாக மனஉளைச்சலுக்கு வாழ்விற்கும் சாவிற்கும் இடையே போராடி வருகிறார்கள்.

ஆகவே, வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் உழலும் இலட்சக்கணக்கான தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு தற்காலிகத் துயர்துடைப்பு நிதியாக ரூபாய் பத்தாயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என அவர் அறிக்கை விடுத்துள்ளார்.

Similar News