18 வயது நிரம்பியிராத குழந்தைகள் இணயத்தில் சுதந்திரமாக உலா வருவதனால் என்னவெல்லாம் ஆபத்து நிகழும், பிஞ்சு வளரும் உள்ளங்கள் என்ன எந்தளவிற்கு வக்கிரம் நிறைந்த வன்மமனதாக மாறும் என்பதற்கு சரியான உதாரணமாக யூ ட்யூப் சேனல் மதன் விவகாரம் உருவெடுத்துள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக சரியான முறையில் பள்ளிகள் இயங்காததால் தமிழகத்தில் பல பதின்ம வயது மாணவர்கள் தங்கள் கல்வியை ஆன்லைன் மூலம் கற்க வேண்டிய சூழல் உருவாகியது. வீடியோ கால்கள் மூலம் வகுப்பறைகள், வாட்ஸ் அப் மூலம் செய்முறைகள், யூ ட்யூப் மூலம் ரெபஃரன்ஸ் வீடியோக்கள் என பருவ வயது பிள்ளைகள் இணையத்தில் பெருவாரியான பொழுதை சமீப காலமாக கழித்து வருகின்றனர். பெற்றோர்களும் சரி பிள்ளைகள் ஊர் சுற்றி வராமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து அடைபட்டு கிடக்கின்றனரே என அலட்சியமாக விட்டு விடுவதால் ஏற்படும் ஆபத்து எந்த அளவிற்கு கொடியது என யூ ட்யூப் சேனல் மதன் விவகாரம் நிரூபித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் மத்திய அரசு பப்ஜி விளையாட்டை தடை செய்தது. இதன் காரணமாக சதா சர்வகாலமும் பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடந்த அதன் அடிமை சிறார்களை குறிவைத்து யூ ட்யூப் சேனல் துவங்கினார் மதன். அதாவது பப்ஜி விளையாட்டு அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்ய இயலாது ஆனால் மதன் யு ட்யூப் பக்கத்தில் அந்த விளையாட்டில் பங்குகொள்ள இயலும். மேலும் இந்த முறையில் விளையாடுவது மூலம் சிறார்கள் மற்றும் சிறுமிகள் தங்களை முகத்தை காட்டி விளையாட வேண்டும் என்று அவசியமில்லை மாறாக தங்கள் நினைக்கும் நேரத்தில், நினைத்த வார்த்தைகளை சரளமாக (பெரும்பாலும் கெட்ட வார்த்தைகளை) உபயோகித்துகொண்டு முகம் தெரியாத இணைய நண்பர்களை சேர்த்துகொண்டு விளையாட முடியும்.
அப்படி விளையாட்டின் ஒருபடி மேலே சென்று விளையாட்டில் பங்குபெறும் பதின்ம வயது சிறுவர், சிறுமியர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் (சில சமயங்களில் அதிகபட்சமாக வாட்ஸ்அப் எண்களை கூட பரிமாறிகொண்டு) தங்கள் இஷ்டத்திற்கேற்ப காம பேச்சுக்களை வளர்த்துக்கொண்டும், நிர்வாண நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கால்களை பரிமாறிகொண்டும், ஏன் சில நேரங்களில் உட்சபட்சமாக நேரில் சந்தித்து தங்கள் இச்சைகளை தீர்த்து கொள்ளவும் வழி வகுக்கின்றன.