தி.மு.கவின் வாக்குறுதி என்ன ஆனது? அண்ணாமலை கேள்வி!

Update: 2025-07-27 17:33 GMT

தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுவதாக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும் பொழுது,"நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில், அங்குள்ள தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை மொத்தமாகப் பறந்து, அருகிலுள்ள வீட்டில் விழுந்து அந்த வீட்டின் கூரையையும் சேதப்படுத்தி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பகல் நேரத்தில், பள்ளிக் குழந்தைகள் இருக்கும் நேரத்தில் இது போன்று நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடன், 10,000 புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம். அமைச்சர்கள் இத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டினோம் என்று ஆளுக்கொரு கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மலைப் பகுதியில் உள்ள பள்ளியின் மேற்கூரை கூட, இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் சரி செய்யப்படவில்லை என்பதுதான் திமுக ஆட்சியின் உண்மையான அவல நிலை.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் ஏற்கனவே பலமுறை கேட்டதையே மீண்டும் கேட்கிறோம். எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த ஊர்களில், இதுவரை புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருக்கிறீர்கள்? நான்கு ஆண்டுகளாக திமுக அரசு வெற்று விளம்பரங்களுக்குச் செய்யும் செலவை, இத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று, முழு விவரங்களோடு விளம்பரம் செய்யலாமே? யார் உங்களைத் தடுக்கிறார்கள்" என அவர் தனது கேள்வியை முன் வைத்து இருக்கிறார்.

Similar News