'தற்போது நாம் பெற்றது மாபெரும் வெற்றி அல்ல' தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் ஸ்டாலின்!

Update: 2021-06-22 07:00 GMT

"தற்போது நாம் பெற்று இருப்பது மாபெரும் வெற்றி அல்ல, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும்" என தி.மு.க எம்.எல்.ஏ-களிடம் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எப்படி நடந்துகொள்வது தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்புவது உள்ளிட்டவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதில் அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த விவரங்களில் மிகத் தெளிவுடன் இருக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கும் கோரிக்கைகளுக்கும் முறையான பதிலை உடனுக்குடன் அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில், "தற்போது நாம் பெற்று இருப்பது மாபெரும் வெற்றி அல்ல, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறும் வகையில், ஐந்தாண்டுகளில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.பேரவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும். பேரவையில் சிறப்பாக செயல்படுவதற்கு உறுப்பினர்கள் துறை வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டது.

Similar News