மோசடி வழக்கில் குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ'வுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ மாணிக்கம் நேற்று நான்காவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.
குளித்தலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மீது பெண் ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் கரூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மாணிக்கம், இவர் இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இந்தநிலையில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம் கடந்த ஆண்டு 9 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது மாணிக்கம் வாங்கிய கடனுக்கு வங்கி காசோலையை ராஜம்மாளிடம் கொடுத்துள்ளாராம்.
அதை ராஜம்மாள் வங்கியில் செலுத்தியபோது சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் பெயரில் உரிய தொகை இல்லாமல் காசோலை செல்லாதபடி ஆகிவிட்டது, இதனை மாணிக்கத்திடம் கேட்டபோது அவரிடம் முறையாக பதில் சொல்லவில்லை இதனால் கோபமடைந்த ராஜம்மாள் இதுகுறித்து கரூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு கரூர் விரைவு நீதிமன்றத்தில் வரும்பொழுது குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம் மூன்று முறை நீதிபதி சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக நீதிமன்ற தரப்பில் சொல்லப்படுகிறது, இதனையடுத்து மாணிக்கம் நேற்று 4-வது முறையாக ஆஜராகாத காரணத்தால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியான தி.மு.க எம்.எல்.ஏ மீது பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.