அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் பா.ஜ.க - சீரமைப்பு நடவடிக்கையை தொடங்கிய அண்ணாமலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் பா.ஜ.க'வை வலுப்படுத்தும் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 489 பேரூராட்சிகளில் நகர்ப்புற தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 12838 இடங்களில் 5480 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் அதில் 308 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் அவர்கள் பெற்ற மொத்த இடங்களில் 200 இடங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க பெற்றது. சென்னை மாநகராட்சியில் பா.ஜ.க முதன் முறையாக ஒரு வேட்பாளரை வெற்றி பெற வைத்தது.
ஆனாலும் இந்த தேர்தலில் பா.ஜ.க குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தை பெற்றது, தமிழக பா.ஜ.க மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த தேர்தல் முடிவுகளை வைத்து அடுத்த கட்ட வளர்ச்சியை குறிவைத்து நகருகிறது பா.ஜ.க தலைமை.
தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லி தலைமைக்கு எடுத்துக் கூறி தமிழகத்தில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பா.ஜ.க பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு கட்சிப் பொறுப்புகளில் ஒரு சில மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அண்ணாமலையின் இந்தக் கோரிக்கைக்கு டெல்லி தலைமை அனுமதி வழங்கி உள்ளது, இதன் காரணமாக தமிழக பா.ஜ.க'வில் முதற்கட்டமாக சில மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.
அதன்படி முதற்கட்டமாக திருநெல்வேலி, நாகப்பட்டினம் சென்னை மேற்கு, வட சென்னை தெற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வளர்ச்சிக்காக சீரமைக்கும் பணியில் அண்ணாமலை முனைப்பு காட்டி வருகிறார். அதன் காரணமாக மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள், மண்டல கமிட்டி என அனைத்தும் கலக்கப்படுகின்றன. மேலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை தற்காலிக மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.