தமிழன்னையை இழிவாக சித்தரிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது காவல்துறை வசம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தமிழன்னையை சித்தரித்து பதிவிட்டிருந்தார், இது பல விமர்சனங்களை எழுப்பிய நிலையில் சென்னையில் வசித்து வரும் முத்து ரமேஷ் நாடார் என்பவர் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி நிர்வாகி, அவர் இணையம் வாயிலாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று அனுப்பி புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது, "உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழன்னைக்கு சிலை அமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். தமிழறிஞர்கள் பலர் தமிழன்னை படங்களை அழகாக தெய்வமாக வெளியிட்டுள்ளனர், அவற்றில் சிலப்பதிகாரம், திருக்குறள், மணிமேகலை, குண்டலகேசி, சீவக சிந்தாமணி, வளையாபதி போன்ற நூல்கள் தமிழன்னையின் கரங்களில் செங்கோல்களாக காட்சியளிக்கின்றன. ஆனால் இசையமைப்பாளர் ரஹ்மான் தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இது உலகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும். தமிழர்கள் தெய்வமாக வழிபடும் தமிழன்னையின் கொச்சையான படத்தை வெளியிட்டு இசையமைப்பாளர் ரஹ்மான் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.