"தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி பெறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது" என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் போட்டியிட்ட பா.ஜ.க'வினரை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசும் பொழுது கூறியதாவது, "தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க எத்தனை வாக்குகள் பெற்று இருந்தாலும் அதெல்லாம் வைரங்கள் அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். தேர்தலின்போது வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இருக்கிறீர்கள் அதன் மூலம் மக்கள் மனதில் பா.ஜ.க அனைவருக்குமான கட்சி என்பதை நீங்கள் நிலைநிறுத்த உள்ளீர்கள், இதனால் பா.ஜ.க'வின் மதிப்பு உயர்ந்திருக்கிறது உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தளர்ந்து போய் விடக்கூடாது பணம் பதவி பலத்தை எதிர்த்து பெற்ற வாக்குகள் நமக்கு பெரிய வாக்குகள் அடுத்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறலாம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "பா.ஜ.க'வில் உறுப்பினராக சேர வேண்டுமென்றால் பாரத அன்னை மீது மரியாதை, நம்பிக்கை இருந்தாலே போதும் ஒரு குடும்பத்தில் பிறந்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வருங்காலம் பா.ஜ.க'வின் காலமாக இருக்கும் அதற்காக நாம் கடுமையாக உழைத்து வருகிறோம் தொடர்ந்து உழைப்போம்" என்றார்.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து குஜராத், கர்நாடகம், டெல்லி, தேர்தல் வரவுள்ளன! 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி நம்முடைய சந்தேகம் அது 300 இடங்களா? 400 இடங்களா? 450 இடங்களா எத்தனை பிடிப்போம் என்பதுதான் தமிழகத்தில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டு 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் 25 இடங்களில் வெற்றி பெறும் அளவிற்கு பா.ஜ.க வளர்ந்திருக்கிறது" என அண்ணாமலை கூறினார்.