பத்து வருட காங்கிரஸ் ஆட்சி பெற்ற நேரடி அந்நிய முதலீட்டை 7 வருடங்களில் பெற்ற மோடி அரசு - நிர்மலா சீதாராமன்
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வந்த அந்நிய நேரடி முதலீடு தொகையை விட 65% அதிக முதலீட்டை மோடி அரசு பெற்று சாதனை செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று கூறியதாவது, "மோடி அரசாங்கத்தின் காலகட்டத்தில் நம் நாட்டிற்கு வந்த அன்னிய நேரடி முதலீடு 500.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பேடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தை ஒப்பிடும்போது அவர்கள் ஆண்ட 10 வருடங்களில் பெற்ற தொகையை விட 65 சதவீதம் அதிகம்' என்றார். மேலும் அவர் "ஏனெனில் முதலீட்டாளர்கள் தற்போதைய மோடி ஆட்சியின் பொருளாதார நிர்வாகத்தை நம்பியுள்ளனர்" என பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.
நிதி மசோதா, 2022 மற்றும் ஒதுக்கீட்டு மசோதா, 2022 மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், UNCTAD அறிக்கையின்படி, உலகின் முதல் ஐந்து வெளிநாட்டு நேரடி முதலீடு பெறும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது என்றார்.
கடந்த நிதியாண்டில் 74.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 2020-21ல் அந்நிய நேரடி முதலீடு 81.72 பில்லியன் டாலராக இருந்தது.
கோவிட் தொற்றுநோய் இருந்தபோதிலும், அரசாங்கம் வளங்களைத் திரட்டுவதற்கு வரிகளை நாடவில்லை என்றும் பொருளாதார மீட்சிக்கு நிதியளிக்க எந்த வரியும் அதிகரிக்கப்படவில்லை என்றும் நிதியமைச்சர் கூறினார்.
மறுபுறம், OECD அறிக்கையின்படி, 32 நாடுகள் தங்கள் பொருளாதார மீட்சிக்கு நிதியளிப்பதற்காக தங்கள் வரி விகிதங்களை அதிகரிப்பதை நாடியுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொற்றுநோயைப் போலவே அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது என்பதையும் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.7.45 லட்சம் கோடியை விட, நடப்பு நிதியாண்டில் ரூ.8.35 லட்சம் கோடி மத்திய வரிகளிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் அப்போது கூறினார்.