100 கோடி கேட்ட ஆர்.எஸ்.பாரதி - "கோர்ட்டில் பாத்துக்கலாம்" என அசால்டாக டீல் செய்த அண்ணாமலை
"நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது உங்கள் எல்லா அச்சுறுத்தல்களையும் நீதிமன்றத்தில் சந்திப்பேன், எனது போராட்டம் தமிழகத்திற்காக" என தி.மு.க'விற்கு அண்ணாமலையின் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருந்தார், முதலமைச்சரின் துபாய் பயணத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளதாக அவர் விருதுநகரில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தி.மு.க'வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது, இதனை அடுத்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "தமிழக வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை கருத்து பரப்பி உள்ளார் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதற்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் பதிலளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "தி.மு.க கட்சி என்மீது 100 கோடி ரூபாயை நஷ்டீடு கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கேள்விப்பட்டேன், தி.மு.க என்னைப் போன்ற சாதாரண சாமானியனை அவர்களைப் போன்ற 'துபாய் குடும்பத்திற்கு' ஈடாக நினைத்து நடத்துகிறது. நமது நீதித் துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது உங்கள் எல்லா அச்சுறுத்தல்களையும் நீதிமன்றத்தில் சந்திப்பேன். எனது போராட்டம் தமிழகத்திற்காக" என கூறியுள்ளார்.