3 அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் திமுக தலைமை - பரபர தகவல்கள்!

Update: 2023-05-05 03:32 GMT

வெளியாகவிருக்கும் திமுகவின் புதிய அமைச்சரவை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த சில மாதங்களாகவே திமுக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக கூற வேண்டும் என்றால் அமைச்சர்கள் பொதுவெளியில் மக்களிடம் பேசும், நடந்து கொள்ளும் முறைகள் அனைத்தும் திமுக அரசுக்கு பின்னடைவை தான் ஏற்படுத்தி உள்ளன. அமைச்சர்கள் கே என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்ற அனைவரும் மக்கள் மத்தியிலும் நடந்து கொள்ளும் விதம் அவ்வபோது திமுக மீதான அதிருப்தி அதிகமாக காரணமாக அமைந்துவிட்டன.

இது எல்லாவற்றிற்கும் மேலாக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவை விமர்சித்தது திமுகவை வாழ்நாள் சிக்கலில் இழுத்து மாட்டி விட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் நாம் சகித்துக் கொண்டிருந்தால் நமக்கு இதற்கு மேலும் அரசியல் அடி ஏற்படும் எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது கடினமாகிவிடும் அதைவிட 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிடும் என பல்வேறு அரசியல் கணக்குகளை போட்டு வந்த திமுக தலைமை தற்பொழுது அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகியுள்ளது.

அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர் ஸ்டாலின் அதில் முக்கியமான சில விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன, அமைச்சரவை மாற்றத்தில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்! யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்காது! என்றெல்லாம் சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த உறுதி செய்யப்படாத தகவல்களை அறிவாலய வட்டாரத்தில் விசாரித்த பொழுது சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த தகவலின் அடிப்படையில் மூன்று அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது அந்த மூன்று அமைச்சர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகிய மூன்று பேரும் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று பேருக்கு பதில் அமைச்சரவையில் மூன்று பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்கள் அந்த மூன்று பேரும் இதுவரை அமைச்சராக இல்லாமல் புது முகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என கூறப்படுகிறது. இந்த மூன்று பேரில் ஒருவர் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பார் எனவும் இளைஞர்களுக்கு முதல் தடவை அமைச்சராக வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அவர்கள் பற்றிய தகவல்கள் சேகரித்ததில் கயல்விழிக்கு பதில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருப்பதாக வாய்ப்புகள் தெரிவிக்கின்றன அதேபோல் இவர் ஏற்கனவே அந்த இலாகாவை நிர்வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் சங்கரன் கோயில் எம்எல்ஏ ராஜாவுக்கு அந்த வாய்ப்பு போகலாம் என்றும் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சர்கள் இல்லை என்ற திமுக அரசின் இரண்டு ஆண்டு கால குறையை போக்கும் வகையிலும் திமுக மூத்த தலைவரும், திமுக பொருளாளருமான, எம்பி டி ஆர் பாலுவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் டி ஆர் பாலுவின் மகன் டி ஆர் பி ராஜாவிற்கு அமைச்சராக வாய்ப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு வலுவான இலாகா ஏதாவது ஒன்று ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலனுக்கும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் எழிலனும் முதல் அமைச்சரின் குட் புக்கில் இருக்கிறார் எனவே எழிலனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. மேலும் திமுகவின் எம்எல்ஏ எழிலனின் தந்தை நாகநாதன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானதால் அவர் அமைச்சர் பதவிக்கு சரியாக இருப்பார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் திருவிடைமருதூர் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் கோவி.செழியினை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் யோசித்து வருவதாக தெரிகிறது. தற்பொழுது கோவி.செழியன் திமுக சட்டசபை கொறடாவாக உள்ளார் அவர் அமைச்சராகும் பட்சத்தில் திமுக கொறடா பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்படும்.

இது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் இலாக்காக்கள் மாற வாய்ப்புள்ளது. மாற்றத்தில் தற்பொழுது பிடி ஆர் பழனிவேல் தியாகராஜரின் பெயர் இல்லை என்றே தெரிகிறது. மேலும் துணை முதல்வராக உதயநிதி பதவி ஏற்பாரா என்ற கேள்விக்கு அனைத்து வட்டாரங்களும் தற்போதைக்கு இல்லை என்றே கூறுகின்றனர்.

Similar News