கும்பகோணத்தை ஆன்மீக நகராக அறிவித்து சிறப்பு ரயில்கள் இயக்குவோம் - குடந்தையில் அண்ணாமலை வாக்குறுதி

Update: 2022-06-15 13:35 GMT

கும்பகோணத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் 400க்கும் அதிகமான எம்.பி.க்களுடன் பா.ஜ.க. 3வது முறையாக அமோக ஆதரவுடன் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், அதில் 25 எம்.பி.க்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்வார்கள் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 8வது ஆண்டு கால சாதனைகள் விளக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது: கடந்த ஒரு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிம்மதியாக இருக்கின்ற ஒரே குடும்பம் கோபாலபுரம் குடும்பம் மட்டுமே. ஆனால் சாதாரண மக்களின் குடும்பத்தில் நிம்மதி என்பது இல்லை.

தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம், கஞ்சா விற்பனை, படுகொலைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தவறு செய்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. லாக்கப்பில் மரணங்கள் அதிகரிக்க போலீசார் காரணம் அல்ல, ஆட்சியாளர்கள்தான். கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அமைச்சர்கள் தங்களை நல்லவர்களாக பொதுக்களிடம் காட்டிக் கொண்டு நடித்து வந்தார்கள். தற்போது அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் செய்த பழைய தொழில்கள் நியாபகம் வருவது போன்று பேச தொடங்கிவிட்டனர்.

அதாவது அவர்களின் பழைய தொழிலான பிட்பாக்கெட், ரவுடி லிஸ்ட் மற்றும் தண்ணீர் லாரி ஓட்டுபவர்களாக இருந்தததை காட்டுவதாக அவர்களின் பேச்சு அமைந்துள்ளது. தி.மு.க. அமைச்சர்கள் பேசும் பேச்சை பெண்கள் காது கொடுத்து கேட்க முடியாது. தி.மு.க. ஆட்சி நடத்துவர்கள் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சில இயக்குனர்களை வைத்துக் கொண்டு சினிமா படப்பிடிப்பு போன்று எடுத்து வருகின்றனர். தி.மு.க. கொடுத்த 517ல் இதுவரை 15 கூட நிறைவேற்றவில்லை.

மேலும், பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளார். விவசாயிகளின் நலனை கருதி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது என்பதை மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே திட்டவட்டமாக அறிவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twitter

Tags:    

Similar News