நேபாள அரசியல் கொந்தளிப்பு.. திரைமறைவில் இருந்து காய் நகர்த்தும் சீனா.!
நேபாள அரசியல் கொந்தளிப்பு.. திரைமறைவில் இருந்து காய் நகர்த்தும் சீனா.!
சீனா பல நாட்டு அரசியலிலும், பொருளாதாரத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டு வருவது தெரிந்த விஷயம். நமது அண்டை நாடான நேபாளத்தில், சீனா வெளிப்படையாகத் தலையிட ஆரம்பித்த நாளிலிருந்து அந்நாடு பல புரட்சிகளையும், மாற்றங்களையும், நிலையற்ற தன்மையையும் பெற்று ஒரு கொந்தளிப்பின் நடுவிலேயே உள்ளது.
தற்பொழுது இந்திய-நேபாள உறவை குலைக்க வேண்டுமென்ற நோக்கில், நேபாள அரசியலில் சீனா தலையிட்டதால் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு பிரச்சினைகள் உருவாகி, பிறகு அதுவே சீனாவிற்கு பாதகமாக திரும்பி தற்போது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உடைந்து, ஆட்சி கலைந்து மக்கள் தெருவில் பலவித காரணங்களுக்காக போராட்டத்தில் குதித்த நிலைமை ஏற்பட்டு ஒரு அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் நேபாள அரசியலில் தலையிடும் முயற்சிகளை சீனா நிறுத்தவில்லை. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இதற்காகவே மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை சீனா நிலை நிறுத்தியுள்ளது. இது நேபாள அரசியல்வாதிகளைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாக விவரங்களை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுத்துறை துணைத் தலைவர் குவோ ஏசோவு தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவை சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேபாளத்திற்கு அனுப்பி இருந்தார். இது மீடியாக்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
பிரதமர் கேபி சர்மா ஓலி மற்றும் முன்னாள் பிரதமர்கள் புஷ்ப கமல் டஹல் மற்றும் மாதவ் நேபாளம் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சில பிரிவுகளை ஒன்று இணைக்கும் நோக்கத்துடன் இந்த சீன குழு சென்றது .ஆனால் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் இக்குழு புதன்கிழமையுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.
இந்தக் குழு, சமீபத்தில் நேபாள பிரதமர் அந்நாட்டு பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதிக்கு அனுப்பிய பரிந்துரையை வாபஸ் பெறவேண்டும் என்று அவரை வலியுறுத்தவும் அல்லது விரைவில் வரவிருக்கும் நேபாள பாராளுமன்ற தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவினரையும் ஒன்று சேர்த்து போட்டியிட வைக்க வேண்டும் என்ற முயற்சியுடனும் சென்றது. மூன்றாவது யோசனையாக, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இந்த பாராளுமன்ற கலைப்பை ரத்து செய்துவிட்டால் ஏதேனும் ஒரு கம்யூனிஸ்ட் பிரிவுடன் எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கொண்டு ஆட்சி அமைக்க முடியுமா என்ற வாய்ப்புகளையும் ஆராய சென்றதாக கூறப்படுகிறது.