ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் 2 பேர் கைது.!

ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் 2 பேர் கைது.!

Update: 2021-01-17 17:26 GMT

கோவையில் ஆபாச புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவத்திற்காக திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான நாகராஜ் மற்றும் சுதர்சன் ஆகியோர் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படங்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக கோவை மாவட்ட தெற்கு தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் சதீஷ்குமார் என்பவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திமுக முரசொலி மன்றம் துணை செயலாளர் நாகராஜ் மற்றும் திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு உறுப்பினர் சுதர்சன் ஆகியோர் முகநூல் பக்கத்தில் ஆபாசமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்தும் அதில் இருப்பது தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது பற்றி கேட்கச் சென்ற சதீஷ்குமாரை மேற்படி இரண்டு பேரும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் புகாரில் கூறியுள்ளார். இதனையடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார், நாகராஜ் மற்றும் சுதர்சன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் பொள்ளாச்சி மட்டுமின்றி கோவை மாவட்டம் முழுவதும் திமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொய்யான தகவல்களை பரப்பும் திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுகவினர் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News