ராகுல் காந்திக்கு 'அவமானம்' - ஒபாமா மீதே FIR கோரி நீதிமன்றத்தில் வழக்கு.!
ராகுல் காந்திக்கு 'அவமானம்' - ஒபாமா மீதே FIR கோரி நீதிமன்றத்தில் வழக்கு.!
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் புத்தகம் 'தி ப்ராமிஸ்டு லேண்ட்', உலக தலைவர்களுடனான அவருடைய அனுபவங்களையும், அவர்களைப் பற்றிய அவரது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறது. இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இந்த புத்தகத்தின் முதல் பாகம் சில நாட்களில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் அப்புத்தகத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்தும், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறித்தும் சில எதிர்மறையான கருத்துக்களை ஒபாமா வெளியிட்டிருப்பதாக செய்திகளில் வலம் வந்தது.
இந்நிலையில் இந்தப் புத்தகம் ராகுல்காந்தியின் பல்லாயிரக்கணக்கான 'தொண்டர்களின்' மனதை புண்படுத்துவதாக இருப்பதாகவும் அதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக FIR பதிய வேண்டும் என்றும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் ஒரு வழக்கறிஞர் சிவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அகில இந்திய கிராம வழக்கறிஞர்கள் அசோசியேசனின் தேசிய தலைவரான ஞானபிரகாஷ் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளது. மன்மோகன்சிங் மற்றும் ராகுல் காந்தி பற்றி ஒபாமா கூறியது அவமானகரமானது என்றும் நம் நாட்டின் இறையாண்மை மீதான 'தாக்குதல்' என்றும் வழக்கறிஞர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த 'தலைவர்களுக்கு' மில்லியன் கணக்கான ஆதரவாளர்களும் தொண்டர்களும் இருப்பதாகவும் ஒபாமாவின் புத்தகத்தில் கூறிய கருத்துக்கள் மூலம் அவர்கள் மனம் புண்பட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் இப்புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வீதிகளில் இறங்கினால், அது பெரும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும் எப்ஐஆர் பதிவு செய்யப்படாவிட்டால் தான் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.