ஆக்கிரமிப்பு இடத்தில் கருணாநிதி சிலை - தடை விதித்த நீதிமன்றம்
திருவண்ணாமலையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் வேங்கைக்கால் பகுதிகள் 1992'ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து அங்கு தி.மு.க'வின் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட தி.மு.க'வினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
இதனால் பொதுப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கக் கூடும் எனவும் கால்வாய் அமைந்துள்ள பகுதி எனவும் அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் பருவமழை காலங்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும் எனவே வழக்கு முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் மனுதாரர் சார்பில் கோரப்பட்டது.
மேலும் அரசு தரப்பில் இது தனியார் சொத்து என்றும் அதில் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.