கள்ளச்சாராய மரணம்.. முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.. இ.பி.எஸ் கண்டனம்..

Update: 2024-06-21 08:44 GMT

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஜுன் 24-ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுத்து இருப்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, "கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி தாலுகா, கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் பலிக்கு தார்மிகப் பொறுப்பேற்று, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைக்கத் தவறிய திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தியும், இனியும் இதுபோன்றதொரு சம்பவம் தமிழ் நாட்டில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 24.6.2024 - திங்கள்கிழமை காலை 10 மணியளவில், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களுக்கு உள்பட்டு கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டங்களுக்கு உள்பட்ட தலைமைக் கழகச் செயலாளர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திமுக அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News